நமது தமிழ் மொழியில் எத்தனையோ அழகான விடயங்கள் உள்ளன. தமிழ் மொழியின் இலக்கணத்தைப் பார்த்தாலே புரிந்துவிடும். படிக்கப் படிக்க பல நுணுக்கங்களை நாம் அறியலாம். அப்படி நான் படித்தறிந்த விடயங்களில் ஒன்று தான் எதுகை – மோனை ஆகியவற்றின் பொருள். எதுகை அல்லது மோனை வடிவத்தில் நாம் பல இலக்கியவடிவங்களைப் பார்த்திருப்போம். இவற்றை நாம் பாடல்கள், கவிதைகள் போன்ற படைப்புகளில் பார்க்கலாம்.
அப்படி அறிந்து நானே மோனையுடன் ஒரு கவிதை எழுதினேன். அதை எழுதி இன்று 7 வருடங்கள் ஆகிவிட்டன. நான் அன்று இந்தக் கவிதையை vaanam.dk என்னும் இணையத்தில் வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பாராத அளவில் பாராட்டுக்கள் கிடைத்தது. அந்தப் பாராட்டுக்கள் தான் என்னை மென்மேலும் கவிதைகளை எழுத வைத்தது. இன்று நான் அந்தக் கவிதையை எனது வலைப்பதிவில் – அதாவது blogஇல் – போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
இக்கவிதையில் வரும் மோனை “முற்று மோனை” என்று அழைக்கப்படும். ஓர் அடியில் நான்கு சீர்களிலும் மோனை வருவதால் அதனை “முற்று மோனை” என்று அழைப்பர். டெனிஷ் மொழியில் இந்த மோனையை “bogstavrim” என்று அழைப்பார்கள். கீழே உள்ளது நான் எழுதிய கவிதை. இதில் நான் ஒரு சோர்வடைந்த அகதியின் ஆசைகள் எப்படி தோல்விகளாகி அவனுக்குப் பாரமாகின்றன என்பதைப் பற்றி எழுதினேன். இதில் வரும் வசனங்கள் யாவும் கற்பனையே. ஆனால் இது மன அழுத்தம், அதாவது depression என்ற உளவியல் நோயைப் பற்றி நாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காகவே நான் இதை எழுதினேன். இந்த மன அழுத்தத்தால் எத்தனையோ பேர் அவதிப்படுகின்ரனர். அவர்களையும் அவர்களின் கவலைகளையும் நாம் பொருட்படுத்தி நாம் அவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதினேன். இதற்கு திருக்குறளே சிறந்த உதாரணம்:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
~ திருவள்ளுவர்; திருக்குறள், அதிகாரம் 79, குறள் 786.
வானத்தின் வாசனை வாழ்க்கையின் வாசலில்
அன்பும் அறிவும் அடங்கிய அகதி
பாராட்டும் பாவமும் பாரிடத்தில் பாதி
கனவையும் கலையையும் கண்காணாமல் கலைத்துவிட்டு
மந்தமுள்ள மனதனில் மகிழ்ச்சியை மறையவிட்டு
தொடங்கிய தொடர்கதையை தொல்லையால் தொலைத்துவிட்டேன்
தேன்நிலவின் தேய்பிறைபோல் தேகி தேய
சாய்ந்தகோபுரமாய் சாவில் சாவகாசம் சாய
தன்னம்பிக்கை தனிமையில் தரையில் தவழ்ந்துசெல்ல
நானோ நாரணியவன் நார் நாட
இதயத்தின் இறுதி இலக்கியம் இவ்வுலகில்..
~ பா. அபிராஜினி
